புதன், 14 ஜனவரி, 2009

கல்லாதது .......

வீட்டிற்குள் நுழைந்த உடனயே அவன் மனைவியை அழைத்து "இன்னும் சங்கர் வரைலயா? " என்று ஒரு வித பதட்டத்துடன் கேட்டான்.


"வந்துட்டான். டிபன் சாப்பிட்டிட்டு இப்ப தான் ட்யுஷன் போயிருக்கிறான்.என்ன விஷயம்? "


"ஒண்ணுமில்லை ஒழுங்கா ட்யுஷன் போறானான்னு கேட்டேன்"


"அதான் போறானே,பாவம் அவனுக்கு எங்க நேரம் இருக்கிறது? காலையில யோகா வகுப்பு,அப்புறம் கம்ப்யுட்டர் கிளாஸ்,பின்பு பள்ளிக்கு போகணும்,அப்புறம் அங்கிருந்தே நுழைவு தேர்வு கோச்சிங் போகணும்,வந்து ட்யுஷன் போகணும்,வந்த பிறகு டெஸ்ட்டுக்கு படிக்கணும்,ரெக்கார்ட் எழுதணும்.அவனை பார்த்தாலே பாவமா இருக்குது."

இது சிறிது காலமாக அவன் வீட்டில் தினசரி நடக்கும் ஒரு நிகழ்ச்சி.அவனுக்கு தன் மகனை ஒரு பொறியாளனாக பார்க்கணும்னு வெகு ஆசை.அவன் இப்படி தவறாமல் செய்வது அவனது தந்தை முருகையாவுக்கு சிறிதும் பிடிக்கவில்லை.இருந்தாலும் அவர் ஒன்றும் சொல்வதில்லை.பெரும்பாலும் ஈசி சேரில் சாய்ந்து ஏதாவது ஒரு புஸ்தகம் படித்து கொண்டிருப்பார்.Sardar Vallabai Patel's Letters என்ற ஆங்கில புஸ்தகத்தை படித்து கொண்டிருந்தார்.என்ன புஸ்தகம் வேண்டுமென்று அவர் மகனிடம் சொல்லிவிடுவார்.அலுவலகத்தில் இருந்து வரும்போது பொது நூலகத்தில் இருந்து எடுத்து வந்து அவன் தான் தந்தைக்கு வழங்குவது வழக்கம்.புஸ்தகத்தில் கவனம் இருந்தாலும் கணவன் மனைவிக்குள் நடந்த இந்த உரையாடலை அவர் கவனிக்க தவறவில்லை.அவரும் ஒரு காலத்தில் தன் மகனை ஒரு டாக்டர் ஆக பார்க்க ஆசைப்பட்டார்.மகனிடமும் அதை தெரிவித்திருந்தார்.ஆனால் அவன் ஒரு சராசரி மாணவனாக இருந்த காரணத்தினால் அந்த ஆசை நிறைவேறவில்லை.தவிர அவர் மகனை இது போல் இம்சித்ததில்லை.ஓன்று அல்லது இரண்டு முறை தெரிவித்திருப்பார்.அவ்வளவு தான்.முருகையாவின் மனைவி கோமதி அம்மாள் இது போன்ற விஷயங்கள் எதிலும் தலையிடுவதே இல்லை.அவங்களுக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்வதற்கே நேரம் சரியாக இருக்கும்.அவனுக்கு என்று தனி விருப்பு வெறுப்பு என்று ஏதும் இல்லாத வயதில் அவன் தனது பட்ட படிப்புக்கு விலங்கியல் பாடத்தை தேர்வு செய்தான்.மருத்துவ படிப்பு இல்லை என்று ஆகிவிட்ட நிலையில் முருகையாவும் அதை பெரிதாக நினைக்கவில்லை.விலங்கியல் படித்துவிட்டு சற்றும் சம்பந்தமில்லாமல் ஒரு பஞ்சாலையில் அவன் வேலைக்கு சேர்ந்தது வேறு விஷயம்.அவனது மனைவிக்கும் மகனை பொறியாளராக பார்க்க அசை தான்.இருந்தாலும் மகன் படும் கஷ்டங்களை பார்த்து அவப்போது மனம் இரங்கி வருத்தப்படுவாள்.வீட்டிற்கு வரும் நண்பர்கள்,உறவினர்கள் எல்லோரும் சொல்லி வைத்தாற்போல் சங்கருக்கு இலவச உபதேசங்கள் வேறு செய்வார்கள்.இதை எல்லாம் பார்க்கும் முருகையா ஏதோ சொல்ல முற்படுவார்.ஆனால் தன்னை கட்டுப்படுத்தி கொள்வார்.இது போக சங்கர் வயதுள்ள உறவினர் வீட்டு பிள்ளைகள் எல்லாம் என்ன படிக்க திட்டமிட்டுள்ளார்கள் என்பது பற்றி வேறு விவாதம் நடக்கும்.அதிலும் முருகையா கலந்து கொள்ள மாட்டார்.

கோமதி அம்மாளின் அண்ணன் மகனும் மனைவியும் ஒரு நாள் அவன் வீட்டிற்கு ஒரு ஞாயிறு அன்று வந்திருந்தார்கள்.வழக்கம் போல பேச்சு பிள்ளைகளின் படிப்பு பற்றி சென்றது.அவர்களுக்கு சங்கர் வயதில் ஒரு மகன் உண்டு.கோமதி அம்மாள்,மருமகனிடம் "உன் மகன் மேற்கொண்டு என்ன படிக்க போறான்?"

"இன்னும் ஒன்னும் முடிவு செய்யவில்லை.எனக்கு அவன் Hospitality Management படிக்கணும்னு ஆசை."

அங்கும் இதே கதை தானா என்பது போல் முருகையா அவனை பார்த்தார்."Why don't you let them choose their career?" முருகையா இப்படி கூறியதும் அவன் அப்பாவின் முகத்தை ஏறிட்டு பார்த்தான்.ஆனால் அவனால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.பேரனை இஞ்சினியரிங் படிப்பதற்கு அவன் வற்புறுத்துவது அப்பாவுக்கு பிடிக்கவில்லை என்பது முதன் முதலாக அவனுக்கு புரிந்தது.

"இல்லை மாமா. அந்த காலத்தில் எங்களுக்கு யாரும் career guidance குடுக்கவில்லை,.இன்று அப்படி இல்லை.நிறைய புது படிப்புகள் வந்துள்ளது.அதில் வேலை வாய்ப்பு அதிகம் உள்ள துறையை தேர்ந்தெடுத்து படித்தால் அவர்களின் எதிர்காலம் நல்லா இருக்கும்." இதற்கும் ஏதோ சொல்ல நினைத்த முருகையா தன்னை கட்டுப்படுத்தியது தெரிந்தது.

"அது என்ன ஹாச்பட்டில் சம்பந்தப்பட்ட படிப்பா?" கோமதி அம்மாள் கேட்டாள்.

" இல்லை அத்தை.! Hospitality, பெரிய ஸ்டார்  ஹோட்டல் சம்பந்தப்பட்ட படிப்பு."

"அப்படியா எங்க வீட்டில பேரன் இன்ஜினீயர் ஆகணம்னு அவன் அப்பா தினமும் அவனிடம் சொல்லி கொண்டிருப்பான்"

அவர்கள் சென்ற பிறகு அவனிடம் மனைவி கேட்டாள் "ஏங்க அவரு சொன்ன படிப்புக்கு ரெம்ப செலவாகுமா?"

"அதை பற்றி நமக்கென்ன ? சங்கர் இன்ஜினீயரிங் தான் படிக்கணும் " அவன் தீர்மானமாக சொன்னான்

அடுத்த நாள் அவன் ஆபீஸில் இருந்து வந்த உடன் "சங்கர் எங்கே ? "என்று கேட்டான்.

"இப்ப வந்திடுவான்.இன்று ட்யுஷன் கிடையாது.நண்பன் வீட்டிற்கு போயிருக்கான்."

"இன்ஜிநீயரிங்கில் மவுசு உள்ள பிரிவு எது என்று விசாரித்து லிஸ்ட் கொண்டு வந்திருக்கிறேன்.அவனிடம் இது பற்றி பேசவேண்டும்."

சற்று நேரத்தில் சங்கர் வருகிறான்.சங்கர் உள்ளே நுழைந்த உடனயே "சங்கர் இங்க வா.நீ வழக்கமான இன்ஜினியரிங் பிரிவு எதையும் படிக்க வேண்டாம்.கம்ப்யுட்டர் பிரிவு நீ படித்து முடிக்கும் பொது saturate ஆயிடும்.மவுசு அதிகம் உள்ள பிரிவுகள் லிஸ்ட் தான் இது.இதுல உனக்கு எந்த பிரிவு சரியாக இருக்கும்னு நான் குறித்து கொண்டு வந்திருக்கிறேன்."

இதை கேட்ட உடனயே முருகையா ஈசி சேரில் இருந்தபடியே மகனை உற்று பார்த்தார்.பின்பு மகன் பேசுவதை செவி மடுத்து கேட்க தொடங்கினார்.அவன் கையில் வைத்திருந்த லிஸ்டில் சிலது மஞ்சள் நிறத்தில் ஹைலைட் செய்யபட்டிருந்தது.அவையெல்லாம் மகனுக்காக வேண்டி அவன் தேர்வு செய்திருந்த பிரிவுகள்.

"வழக்கமான பிரிவுகள் இல்லாமல் 12 பிரிவுகள் எழுதி கொண்டு வந்திருக்கிறேன்.இதில் Aerospace Engineering and Bio medial Engineering என்று இரண்டு இன்ஜினீயரிங் பிரிவும் Integrated Msc in Atomic Energy என்ற PG பிரிவும் நான்  தேர்வு செய்திருக்கிறேன்.கடைசியா சொன்னது இன்ஜினீயரிங் இல்லை என்றாலும் மதிப்பிலும் வேலை வாய்ப்பிலும் அதற்கு இணையானது.இதில் எது படிக்கிறாய்?"

ஒரு சின்ன குழந்தையின் ஆர்வத்துடன் அவன் சங்கரிடம் கேட்டான்.சங்கர் ஒரு வகை மிரட்சியுடன் அப்பா முகத்தை பார்த்து கொண்டிருந்தான்.இதில் ஏதும் பிடிக்கவில்லை என்று சொன்னால் அப்பா என்ன சொல்வாரோ என்று ஒரு வித பயம்.

"உன்கிட்ட தான் கேட்கிறேன்.என்ன படிக்கிறே?" சங்கரால் ஏதும் பேசமுடியவில்லை.
"வாய் திறந்து ஏதாவது சொல்லேன்"

"இப்பவே அவனை இதெல்லாம் கேட்டால் அவன் என்ன சொல்வான்.அவனுக்கு என்ன தெரியும்.எது நல்லதோ அதை நீங்களே முடிவு செய்யுங்கள்." சங்கரின் அம்மா மகனுக்காக பரிந்து பேசினாள்.

"அப்படியில்லை.இந்த மூன்று பிரிவில ஒரு பிரிவை சொல்ல முடியாதா?"

பேசமுடியாமல் சங்கர் விக்கித்து நின்றான்.இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த முருகையா மகனை பார்த்து " ஒரு நிமிஷம் இரு.இப்ப எதற்கு அவனை ஏதாவது பதில் சொல்ல கட்டாய படுத்துறே? முதல்ல உனக்கு ஒரு விஷயம் புரியணும்.அவனுக்கு இன்ஜினியரிங் படிக்க விருப்பமா என்றே நீ அவனிடம் கேட்கவில்லை.அப்படி இருக்கையில் அதில் ஒரு பிரிவை தேர்ந்தெடுக்க சொல்லி நீ அவனை காட்டயபடுத்த கூடாது.சங்கர் ! உனக்கு என்ன படிக்க விருப்பம் சொல்லு.?"

முருகையா இப்படி பேசியதும் அவனால் ஒன்றும் பேசமுடியாமல் மவுனமாக நின்றான்.சங்கர் அப்பாவின் முகத்தையும் தாத்தாவின் முகத்தையும் மாறி மாறி பார்த்தான்.இப்பவும் அவனுக்கு ஏதும் பேச தோன்றவில்லை.தனது விருப்பத்தை சொன்னால் அப்பா என்ன சொல்வாரோ என நினைத்து மவுனமாகவே நின்றான்.

முருகையா மகனை பார்த்து சொன்னார்."நீ இவ்வளவு தூரம் மெனக்கடறது எனக்கு புரியுது.இதெல்லாம் எதற்காக செய்கிறாய் சொல்லு? ".

"வேறு எதற்கு, அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான்."

"அவன் வாழ்க்கை நல்லா இருக்கிறதற்கு இன்ஜினியரிங் படிக்கணும்னு நீ நினைக்கிறாயா?"
"ஆமா"

"இன்ஜினியர் ஆவதற்கு அந்த கல்வி தேவை.வாழ்க்கை நல்லா இருக்க தேவை இல்லை."
அவனுக்கும் புரியவில்லை.சங்கருக்கும் புரியவில்லை. அவரை ஏறிட்டு பார்த்தார்கள்.

"புரியலையா ? வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் கல்விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஏதோ ஒரு துறையில் காலடி எடுத்து வைக்க தான் இந்த கல்வி தகுதி தேவை.அது கூட இன்றைய உலகில் போட்டி அதிகமாக இருப்பதால் தான் தேவை படுகிறது.அதாவது நீ அடுத்தவனை விட ஏதோ ஒரு வகையில் மேலானவன் என்று காண்பிக்க தேவைப்படுகிறது. ஒரு துறையில் நுழைந்த பின் முன்னேறுவதற்கு இதெல்லாம் தேவை இல்லை.இந்த கல்வி அப்போது பயன்படாது.தொழில் கல்விகளிலயே ஒருவன் படித்த கல்வி அறிவு வெறும் 2 முதல் 7 விழுக்காடு வரை தான் நிஜ வாழ்க்கையில் பயன்படுகிறது.அவன் கல்லாதது தான் வாழ்க்கையில் நிறைய இருக்கிறது.அந்த கல்வி தான் அவனுக்கு வாழ்க்கையில் வெற்றி தேடி தரும். அப்படி இருக்கையில் அவனுக்கு பிடித்த துறையில் வாழ்க்கை அமைந்தால் தான் அந்த புற கல்வி அவனுக்கு கிடைத்து வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.வாழ்க்கையில் வெற்றி பெற தேவை வெறும் common sense தான்."

சங்கரும் அவனும் மௌனமாகவே இருந்தார்கள். மாமா இப்படியெல்லாம் பேசமாட்டாரே, என்ன நடக்கிறது என்று புரியாமல் அவன் மனைவி மூவரையும் பார்த்து கொண்டிருந்தாள்.
"நான் இப்ப என்ன செய்யணும்னு சொல்றீங்க?"

"எல்லா துறைகளிலும் இருக்கிற படிப்புகளை பற்றி அவனிடம் ஒரு பட்டியல் கொடு.ஒவ்வொன்றும் எதை பற்றிய கல்வி என்று அவனுக்கு விளக்கு.அதில் உள்ள சாதக பாதகங்களை அவனுக்கு புரியும்படி சொல்.அடுத்த பத்தாண்டுகளில் அல்லது பதினைந்து ஆண்டுகளில் அவன் அந்த துறையில் எங்கு செல்ல முடியும் என்பவை போன்றவைகளை சொல்லு.அந்த துறையின் உச்ச நிலை என்ன என்பதை விளக்கு.ஒவ்வொரு துறையிலும் உள்ள peaks and valleys பற்றி அவனிடம் சொல்லு.அதற்க்கு பின் அவனாக ஒரு துறையை தேர்ந்தெடுக்கட்டும்.இதற்கு பெயர் தான் career guidance."

"அதை தான் நான் செய்கிறேன்" என்றான் அவன்.

"இல்லை. நீயாக அவனை இன்ஜினியரிங் படிக்க சொல்கிறாய். நீயாக மூணு துறையை வேறு தேர்ந்தெடுக்கிறாய். அதில் ஒன்றை தேர்ந்தெடுக்க சொல்லி அவனை நிர்பந்தம் செய்கிறாய்.உன் விருப்பத்தை அவன் மேல் திணிக்காதே. நல்லா நினைவில் வைத்து கொள்.அவன் விருப்பத்திற்க்கு மாறாக உன்னால் தேர்ந்தெடுக்கப்படும் எந்த துறையும் அவன் வாழ்க்கையை மேம்படுத்தாது. அவனுக்கு வாழ்க்கையில் ஒரு குறிக்கோள், I mean a goal in life தேவை. அதற்கு வழிகாட்டு. அந்த குறிக்கோளை நோக்கி அவன் focused ஆக செயல்படணும்.That will make him successful in life."

முருகையா,"சும்மா சொல்லு சங்கர். உன் வாழ்க்கையை நீ தான் முடிவு செய்யவேண்டும்.என்ன படிக்க போறே?"

சற்று தயங்கி சங்கர், "எனக்கு Mass communication படிக்க விருப்பம்" என்றான் .

"என்னது ? அப்ப இன்ஜினியரிங் படிக்கலையா?' சீறினான் அவன்

சற்று துணிவுடன் சங்கர் "இல்லை" என்றான்.

"அப்பவே சொல்லி தொலைக்க வேண்டியது தானே? என்கிட்டயே communicate பண்ண தெரியலை.நீ எல்லாம் Mass communication படிச்சு என்ன கிழிக்க போறே.?" மகன் இன்ஜினியரிங் படிக்க விருப்பம் இல்லை என்று சொன்ன ஆதங்கத்தில் அவன் புலம்பினான்.

முருகையா மகனை சிறிது நேரம் உற்று நோக்கினார். அவன் மிகவும் நொந்து போய் இருப்பது போல் அவருக்கு தோன்றியது.

"நீ கொஞ்சம் அமைதியாக இரு.You must remember he is just 17 years old." என்றார் மகனை பார்த்து.

சங்கர் பெருமூச்சு விடும் சத்தம் கேட்டது.கண்களின் ஓரத்தில் நீர் துளிகள் தெரிந்தது.முருகையா சற்று நேரம் மகனையும் பேரனையும் உற்று நோக்கினார்.பின்பு பேரனை அழைத்து பக்கத்தில் உட்கார சொன்னார்.சங்கர் அமர்ந்ததும் அவன் தோளில் ஒரு கை வைத்து கொண்டே அவனை பார்த்து சொன்னார்." உனக்கு என்ன விருப்பமோ அதை படி.ஆனால் ஒன்று மட்டும் நினைவில் வைத்து கொள்.அந்த துறையில் நீ தான் சிறந்தவனாக இருக்கணும். அதற்கு இந்த ஏட்டு கல்வி மட்டும் உனக்கு உதவாது. வாழ்க்கையை தேடி கண்டு பிடி. அந்த தேடல் தான் உனக்கு வெற்றியை தேடி தரும். நீ வாழ்க்கையில் வெற்றி பெற தான் உன் அப்பா இதையெல்லாம் செய்கிறான்.வெற்றி பெற்று காட்டு.எந்த துறையாக இருந்தால் என்ன வெற்றி வெற்றி தானே."

"சரி தாத்தா." மெதுவாக அப்பாவின் முகத்தை ஏறிட்டு பார்த்தான் சங்கர்.அவன் இன்னும் கோபம் தணியாமல் இருப்பது புரிந்தது.

"இன்னொன்று சங்கர்,வாழ்க்கையை பின்னால் திரும்பி பார்த்தால் தான் புரிந்து கொள்ள முடியும்.ஆனால் வாழ்வதற்கு முன்னால் பார்த்து தான் ஆக வேண்டும்." சங்கருக்கு புரிந்தது போலவும் இருந்தது புரியாதது போலவும் இருந்தது.எழ முயன்ற சங்கரை தோளை அழுத்தி உட்கார வைத்தார். அவர் இன்னும் முடிக்கவில்லை போலும்.

"வாழ்க்கை என்பது ஒரு கட்டிடம் போல .மெதுவாக தான் உயரும். நமது தினசரி அனுபவங்கள் தான் அந்த கட்டிடத்தை உயர்த்தும். நமது அனுபவங்கள்,இன்னொருவரின் வாழ்க்கை ஏற்படுத்தும் பாதிப்பு, நம்மை கவரும் மனிதர்கள், நம்மை கவரும் அனுபவங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், நாம் படிப்பது, நாம் பார்ப்பது, நமது உரையாடல்கள், பிறர் நம்முடன் உரையாடுவது, நமது செயல்கள், மற்றவர்களில் அது ஏற்படுத்தும் தாக்கம்,பாதிப்புகள்,இவையெல்லாம் தான் அந்த கட்டிடத்தை சிறிது சிறிதாக உயர்த்த உதவுகிற விஷயங்கள்.The whole world is there for you to see,read and learn.When you learn more and more you will learn that you have learnt only less and less."

சங்கர் மெதுவாக அப்பாவின் முகத்தை பார்த்தான்.சற்று அமைதி திரும்பியது போல தெரிந்தது.

"சரி தாத்தா.நாளைக்கே நான் Mass communication course பற்றி விசாரித்து வருகிறேன் "என்றான் சங்கர் உற்சாகத்துடன். மகனின் உற்சாகம் அவனுக்கு வியப்பை அளித்தது.

முருகையா,"இரு சங்கர். இன்னும் வேறு என்னவெல்லாம் options உள்ளது என்றும் தெரிந்து கொள்.அதன் பின் நன்றாக யோசித்து இரண்டு அல்லது மூணு பிரிவுகளை தேர்வு செய்துகொள்.அப்பாவிடம் ஆலோசனை கேள்.பின்பு நீ இறுதி முடிவு செய்.ஆனால் முடிவு உன்னுடையதாக தான் இருக்க வேண்டும்.Best of luck " என்றார்.

அவன் அப்பாவை பெருமிதத்துடன் பார்த்தான்.அவனும் ஏதோ கற்று கொண்டதை போல உணர்ந்தான்.






சனி, 3 ஜனவரி, 2009

ரிஷிமூலம்

தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தேன்.தவணை முறையில் வீட்டு பொருட்கள் விற்கும் 'குமார் ஃபேமலி ஏய்டு கார்பரேஷன்' விளம்பரம் ஓடிகொண்டிருந்தது. தூத்துக்குடியில் நான் படித்த போது என்னுடன் படித்த நண்பனின் நிறுவனம் தான் அது.படிக்கும் போது அவன் அண்ணன் அதை நிர்வகித்து வந்தார்.இப்போது என் நண்பன் தான் அந்த நிறுவனத்தை நடத்துகிறான்.என் மனைவியை அழைத்து இந்த விஷயத்தை சொன்னேன்.

"அதென்ன டீவியில் வரும் விளம்பரங்களை எல்லாம் பார்த்து உங்களுக்கு தெரிஞ்சவர் என்று சொல்றீங்க!"


தங்க நகைக்கு கடன் கொடுக்கும் ஒரு நிறுவனத்தின் விளம்பரம் போன வாரம் வந்தது.தென் இந்தியா முழுவதும் நான்கு மாநிலத்திலும் சேர்த்து அவர்களுக்கு 700 கிளைகளுக்கு மேல் இருக்கிறது.திருவனந்தபுரத்தில் நான் படித்த போது என் வகுப்பு தோழனாக இருந்தவனுக்கு சொந்தமான நிறுவனம் தான் அது.அப்போது அவனது தந்தை தான் நிர்வகித்து வந்தார்.அவனது தாத்தா காலத்தில் இருந்து உள்ள குடும்ப நிறுவனம் அது.ஆனால் அப்போது அது கேரள மாநிலத்தில் மட்டுமே நடத்தி வந்த ஒரு சீட்டு கம்பனியாக மட்டுமே இருந்தது.எனது நண்பன் பொறுப்புக்கு வந்த பின்பு ஆல விருட்சம் போல வளர்ந்து விரிந்து இன்று தென் இந்தியா முழுதும் கிளைகள் உள்ள ஒரு பெரிய நிறுவனமாக உள்ளது.நான் அவனை அதற்க்கு பின் பார்த்தது கிடையாது.இருந்தாலும் அந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு இணையதளத்தில் பார்த்த போது நிர்வாக இயக்குனர் என்று என் நண்பனின் புகைப்படம் இருப்பதை பார்த்து உறுதி செய்து கொண்டேன்.இந்த விஷயத்தை என் மனைவியிடம் கூறியிருந்தேன்.

"உங்களுடன் படித்தவர்கள் எல்லாம் பெரிய நிறுவன முதலாளிகளாக இருக்கிறார்களே"

"ஆமாம் அவர்கள் எல்லாம் பிறக்கும் பொழுதே சீமான்கள் ."


"சரி அதை விடுங்க.நாளை திருச்செந்தூர் போகலாமா? ரெம்ப நாளா சொல்லிகிட்டு இருக்கிறேனே?"

"நாளைக்கா! லீவு எடுக்க முடியாதே, அது போக கோமு காலேஜு போகணும்ல?"

"அவ வரலை என்று சொல்லிவிட்டாள்,நாம போகலாம்"


"அப்படியா! நான் வேணும்னா ஒண்ணு செய்யுறேன்.அரை நாள் லீவு போடுறேன்.ரெண்டு மணிக்கு வரேன். ரெடியா இரு.நான் வந்த உடனே போகலாம்."

வீட்டிலிருந்து கைபேசியில் அழைத்து ஞாபகபடுத்திய உடன் மானேஜரிடம் சொல்லிவிட்டு வங்கியை விட்டு புறப்பட்டேன்.பெருமாள்புரத்தில் இருக்கும் என் வீட்டிற்கு வந்து சேர மணி மூன்று ஆகிவிட்டது.

"ரெண்டு மணிக்கு வர ஆளா நீங்க! நான் ரெடியா இருக்கிறேன்."


"அஞ்சே நிமிஷத்தில் கிளம்பிடலாம்." முகத்தை மட்டும் அலம்பி சற்று பவுடர் பூசிக்கொண்டு உடனே கிளம்பினோம்.புது பேரூந்து நிலையத்தில் இருந்து 3.40 க்கு கிளம்பும் பஸ்சில் இடம் கிடைத்தது.

"நாலே முக்கால்,அஞ்சு மணி ஆகிவிடும்,நாம் அங்கு போய் சேர"


"செய்துங்கநல்லூர்,ஆழ்வார்திருநகர்,திருச்செந்தூர் மட்டும் ஏறுங்க.வேறு எங்கும் நிக்காது.வேறு டிக்கட்டு ஏதும் இருந்தால் தயவு செய்து இறங்கிடுங்க"

"ஸ்ரீவைகுண்டம் நிக்காதா?"

"நிக்காது.அதானம்மா சொல்றேன்."


வேகமாக ஒரு பெண் கை குழந்தையுடன் பேரூந்தை விட்டு இறங்கினாள்.அவள் இறங்கும்போது ஒரு சந்நியாசி வந்து ஏறினார்.காவி உடை, முடி வளர்த்து முதுகு வரை விரித்து விட்டு, மேல் வயிறு வரை நீண்ட தாடியுடன்,தீட்சண்யமான கண்களுடன் இருந்தார்.

"எங்கே சாமி?"

"திருச்செந்தூர்"

"உட்காருங்க சாமி"


நாங்கள் இருந்த இருக்கைக்கு இரண்டு வரிசை முன்னால் உள்ள சீட்டில் அமர்ந்தார். ஏற்கனவே அங்கு இன்னும் இருவர் இருந்தனர். சற்று நகர்ந்து சாமியார் அமர இடம் கொடுத்தனர். பஸ் கிளம்பியதும் நல்ல காற்று வீச ஆரம்பித்தது. லேசாக கண் சொக்க ஆரம்பித்தது. தூங்க கூடாது என்று முடிவு செய்தேன். பொழுது போக பஸ்சில் இருந்தவர்களை எல்லாம் அப்படியே ஒரு பார்வை பார்த்தேன். சந்நியாசி இருந்த இருக்கை வந்த உடன் கண்கள் குத்திட்டு நின்றது. காரணம் சாமியார் தலையை லேசாக ஒருக்களித்து சாய்த்து,கைகளால் தலை முடியை கோதிவிட்டு,கழுத்தை வலது புறம் இருந்து இடது புறமாக சுழற்றினார். இது போன்று செய்பவர் யாரையோ எனக்கு தெரியுமே!யோசித்து பார்த்தேன்.புலப்படவேயில்லை.ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை சாமியார் இது போல செய்து கொண்டே இருந்தார். சந்தேகமே இல்லை .எனக்கு தெரிந்த யாரோ ஒரு நபர் இது போல செய்வார்.எவ்வளவவு யோசித்தும் யாரென்று நினைவுக்கு வரவில்லை.

"அந்த சாமியார் அநேகமாக எனக்கு தெரிந்த நபராக இருப்பார் என்று நினைக்கிறேன்." என் மனைவி என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள்.

"ஏன் அவரும் உங்களுடன் படித்தவரா?" கிண்டல் தொனிக்க கேட்டாள்.

"தெரியலை.இருக்கலாம்.அவர் முகத்தை நன்றாக பார்த்தால் தெரிந்துவிடும்."


எவ்வளவோ முயற்சித்தும் அவர் முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை.ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் கழுத்தை சுழற்றி கொண்டே இருந்தார்.அவரின் இந்த செய்கை என் ஆவலை மேலும் கூட்டியது.திருசெந்தூரில் இறங்கியதும் எப்படியாவது அவரின் முகத்தை உற்று பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தேன்.பஸ்சில் கந்த ஷஷ்டி கவசம் ஒலி பரப்பினார்கள். சாமியாரின் தலை ஆட்டல் பாடலுக்கு ஏற்ப தாளம் இடுவது போல இருந்தது எனக்குள் சிரிப்பை வரவழைத்தது.


5 மணியளவில் திருச்செந்தூர் வந்ததும் வேகமாக சென்று சாமியாரின் முகத்தை பார்த்து விடவேண்டும் என்று முயற்சித்தேன்.அதற்குள் அவர் இறங்கி வேகமாக நடக்க ஆரம்பித்து விட்டார். பார்க்க முடியவில்லை.வேகமாக நடந்து அவரை எட்டி பிடித்து பார்த்து விட வேண்டும் என்று பார்த்தால், என் மனைவியால் அந்த வேகத்தில் நடக்க முடியாது என்பதால் முயற்சியை கை விட்டேன்.

"அவர் யாராக  இருந்தால் நமக்கென்ன,நாம வந்த வேலையை முடித்து விட்டு சீக்கிரம் ஊர் போய் சேருகிற வழியை பார்போம்"


தரிசன டிக்கட்டு வாங்கி விட்டு, சட்டையை கழற்றி இடுப்பில் கட்டி கொண்டு வரிசையில் நிற்கும் பொழுது அதே சாமியார் இன்னொரு சாமியாருடன் வேகமாக எங்களை கடந்து போய் கொண்டிருந்தார்.நடந்து போகும் போதும் அதே போல கழுத்தை சுழற்றிய படியே நடந்தார். செந்தில் ஆண்டவனை தரிசித்து விட்டு, சிறிது நேரம் கடல் காற்றை வாங்கி ரசித்து விட்டு, நாழி கிணறு போகும் பாதைக்கு சற்று முன்பு இருக்கும் செருப்பு டோக்கன் கொடுக்கும் இடத்தில் நிற்கும் போது,மீண்டும் சாமியார் எங்களை தாண்டி சென்றார். இந்த முறை அவர் என்னை உற்று நோக்கினார். மிகவும் பரிச்சயமான் முகம் போல தோன்றியது. ஆனால் யாரென்று சட்டென்று கணிக்க முடியவில்லை.

கோவில் கடை வாசலில் ஏதோ வங்க வேண்டும் என்று என் மனைவி சென்ற சமயம் நான் சற்று தள்ளி ஒரு இடத்தில் அமர்ந்தேன்.தற்செயலாக திரும்பி பார்த்தால் சாமியார் சற்று தள்ளி கண் மூடி தியான நிலையில் அமர்ந்திருப்பதை பார்த்தேன்.கண் மூடியிருந்த அந்த நிலையிலும் அந்த மேனரிசத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார்.அப்படி அவர் தலை முடியை கோதும் போது நெற்றியில் வலது ஓரமாக ஒரு சிறு கோடு போல ஒரு தழும்பு தெரிந்தது.உடனே எனக்கு ஒரு பொறி தட்டியது.என்னுடன் படித்த களக்காடு சிவஞானம் போல உள்ளாரே இந்த சாமியார். ஆனால் சிவஞானத்திற்கு நெற்றி தழும்பு இன்னும் சற்று தடிப்பாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் தழும்பு இருக்கும் இடம் ஏறக்குறைய சரியாக தான் உள்ளது. முக்கியமாக சிவஞானம் கிட்டத்தட்ட இதே போல ஒரு மேனரிசம் செய்வான். ஆனால் சிவஞானத்தை என்னால் சாமியாராக எண்ணி பார்க்க முடியவில்லை. கல்லூரி நாட்களில் அவன் ஒரு ஜாலி பேர்வழி. அவனை சுற்றி எப்பொழுதும் ஒரு கூட்டம் இருக்கும்.அவன் சொல்லும் காதல் கதைகளை ரசிக்க நண்பர்கள் கூட்டம் எப்போதும் அவனை மொய்ப்பதுண்டு.அவன் செய்யாத அட்டூழியம் ஏதுமில்லை என்றே சொல்லலாம்.அவன் சொல்வதில் உண்மை எவ்வளவவு என்று அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்.ஒரு சமயம் அவன் செய்த குறும்புக்கு பரிசாக ஏதோ ஒரு கும்பல் கொடுத்த பரிசு தான் அந்த நெற்றி தழும்பு.சிவஞானத்தை சாமியாராக கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.இருந்தாலும் அவனுக்கும் சாமியாருக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை இருப்பதால் சாமியார் சிவஞானமாக கூட இருக்கலாம். இருந்தாலும் இந்த மாற்றம் அவனிடம் ஏற்பட என்ன நடந்திருக்கலாம்? இப்படியெல்லாம். நினைத்து கொண்டே நான் சாமியார் முன் சென்று நின்றேன். எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை. கண் விழித்து என்னை பார்த்தார்.என்ன வேண்டும் என்பது போல உற்று நோக்கினார்.அவருக்கு என்னை தெரியவில்லை.மீண்டும் புருவத்தை சுருக்கி என்னை பார்த்துவிட்டு கண்களாலயே என்ன வேண்டும் என்று கேட்டார்.

"சாமி நான் ஓன்று கேட்டால் தவறாக நினைக்க மாடீங்களே?" கேள் என்பது போல தலையை அசைத்தார்.

"பூர்வாசிரமத்தில் உங்கள் பெயர் சிவஞானமா?" என் கண்களை உற்று நோக்கினார்.என்வழுக்கை தலை என்னை அடையாளம் காட்டியிருக்க வாய்ப்பில்லை.

"ரிஷிமூலம் பார்க்காதே.நான் சிவானந்தா"

"Every saint has a past " என்று ஆங்கிலத்தில் வேறு சொன்னார்.

கிட்டத்தட்ட சிவஞானம் தான் சாமியார் என்று நான் நினைத்தாலும் சாமியார் பிடி குடுக்கமலயே தான் பேசினார். சாமியார் ஆங்கிலத்தில் பேசியதும்,சிவஞானம் ஆங்கில ட்யுஷன் படிக்க சென்ற கதை என் நினைவுக்கு வந்தது.அந்த ஆங்கில பேராசிரியர் பக்கத்து மாநிலத்துக்காரர். அவர் மனைவி மிகவும் அழகாக இருப்பார்.அதற்காகவே ஆங்கில ட்யுஷன் கற்க சென்றவன் தான் சிவஞானம்.ட்யுஷன் சென்று வந்த பின்பு அவன் கூறும் கதைகளை கேட்க ஒரு சிறு கூட்டம் அவன் பின்னால் செல்லும்.

மீண்டும் என்னை உற்று பார்த்துவிட்டு எனக்கு விபூதி அளித்து "திருச்சிற்றம்பலம்" என்றார்.எனக்கு விபூதி அளிப்பதை பார்த்து குடும்பத்துடன் சென்று கொண்டிருந்த ஒருவர் சாமியாரிடம் திருநீறு வாங்க கை நீட்டினார்.அவருக்கும் விபூதி அளித்தார்.

"சாமி எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி வாக்குவாதம் வந்துகொண்டே இருக்கிறது.மன அமைதியே இல்லை " என்று சொன்னார்.அப்படி அவர் சொன்ன உடன் அவர் மனைவியின் முகம் சுருங்கியது.அதை கேட்ட உடன் சாமியார் வாய் விட்டு பலமாக சிரித்தார்.

பின்பு அந்த நபரை பார்த்து சொன்னார்

"சீறும் வினையது பெண்ணுருவாகி திரண்டுருண்டு
கூறுமுலையு மிறைச்சியுமாகி கொடுமையினால்
மீறுமலமு முதிரமும் சாயும் பெருங்குழிவிட்டு
ஏறும் கரைகண்டலேன் இறைவா கச்சியேகம்பனே"

அவர் சொல்லி கொண்டிருக்கும் போதே என் மனைவி என்னை தேடி அங்கு வந்துவிட்டாள்.எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.பரவாயில்லை சிவஞானம் என்னவோ தத்துவமெல்லாம் சொல்லுகிறானே என்று நினைதேன்.

"இந்த சாமியார் எதற்கு அவரிடத்தில் பட்டினத்தார் பாடலை சொல்கிறார்?"

"அது பட்டினத்தார் பாடலா?"

" ஆமாம் .அவரது பாடல்கள் எல்லாம் பெண்களை குறை கூறுவது போல தான் இருக்கும்"


என் மனைவி தமிழ் முதுகலை பட்டதாரி. அவள் சொன்னால் சரியாக தானிருக்கும்.பெண்களால் ஏதோ நடந்து விரக்தி அடைந்து பட்டினத்தார் பாடலகள் பாடுகிறானோ? யாருக்கு தெரியும்! ஆனால் அப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

"நம்முடன் பஸ்சில் வந்தாரே அந்த சாமியார் என் வகுப்பு தோழன் சிவஞானம் போல தான் தெரிகிறான்" என் மனைவி என்னை ஒரு மாதிரி பார்த்தாள்.

"இனி உங்களுடன் படிக்காதவர் யாரென்று மட்டும் சொல்லுங்கள்"

Every saint has a past என்பதால் தான் பெரியவர்கள் 'நதிமூலம் ரிஷிமூலம்' பார்க்ககூடாது என்று சொல்லி இருக்கிறார்கள் போலிருக்கிறது.ஆனால் எனக்கு இன்னொரு விஷயமும் நன்றாக புரிந்தது. Every sinner has a future!.