சனி, 3 ஜனவரி, 2009

ரிஷிமூலம்

தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தேன்.தவணை முறையில் வீட்டு பொருட்கள் விற்கும் 'குமார் ஃபேமலி ஏய்டு கார்பரேஷன்' விளம்பரம் ஓடிகொண்டிருந்தது. தூத்துக்குடியில் நான் படித்த போது என்னுடன் படித்த நண்பனின் நிறுவனம் தான் அது.படிக்கும் போது அவன் அண்ணன் அதை நிர்வகித்து வந்தார்.இப்போது என் நண்பன் தான் அந்த நிறுவனத்தை நடத்துகிறான்.என் மனைவியை அழைத்து இந்த விஷயத்தை சொன்னேன்.

"அதென்ன டீவியில் வரும் விளம்பரங்களை எல்லாம் பார்த்து உங்களுக்கு தெரிஞ்சவர் என்று சொல்றீங்க!"


தங்க நகைக்கு கடன் கொடுக்கும் ஒரு நிறுவனத்தின் விளம்பரம் போன வாரம் வந்தது.தென் இந்தியா முழுவதும் நான்கு மாநிலத்திலும் சேர்த்து அவர்களுக்கு 700 கிளைகளுக்கு மேல் இருக்கிறது.திருவனந்தபுரத்தில் நான் படித்த போது என் வகுப்பு தோழனாக இருந்தவனுக்கு சொந்தமான நிறுவனம் தான் அது.அப்போது அவனது தந்தை தான் நிர்வகித்து வந்தார்.அவனது தாத்தா காலத்தில் இருந்து உள்ள குடும்ப நிறுவனம் அது.ஆனால் அப்போது அது கேரள மாநிலத்தில் மட்டுமே நடத்தி வந்த ஒரு சீட்டு கம்பனியாக மட்டுமே இருந்தது.எனது நண்பன் பொறுப்புக்கு வந்த பின்பு ஆல விருட்சம் போல வளர்ந்து விரிந்து இன்று தென் இந்தியா முழுதும் கிளைகள் உள்ள ஒரு பெரிய நிறுவனமாக உள்ளது.நான் அவனை அதற்க்கு பின் பார்த்தது கிடையாது.இருந்தாலும் அந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு இணையதளத்தில் பார்த்த போது நிர்வாக இயக்குனர் என்று என் நண்பனின் புகைப்படம் இருப்பதை பார்த்து உறுதி செய்து கொண்டேன்.இந்த விஷயத்தை என் மனைவியிடம் கூறியிருந்தேன்.

"உங்களுடன் படித்தவர்கள் எல்லாம் பெரிய நிறுவன முதலாளிகளாக இருக்கிறார்களே"

"ஆமாம் அவர்கள் எல்லாம் பிறக்கும் பொழுதே சீமான்கள் ."


"சரி அதை விடுங்க.நாளை திருச்செந்தூர் போகலாமா? ரெம்ப நாளா சொல்லிகிட்டு இருக்கிறேனே?"

"நாளைக்கா! லீவு எடுக்க முடியாதே, அது போக கோமு காலேஜு போகணும்ல?"

"அவ வரலை என்று சொல்லிவிட்டாள்,நாம போகலாம்"


"அப்படியா! நான் வேணும்னா ஒண்ணு செய்யுறேன்.அரை நாள் லீவு போடுறேன்.ரெண்டு மணிக்கு வரேன். ரெடியா இரு.நான் வந்த உடனே போகலாம்."

வீட்டிலிருந்து கைபேசியில் அழைத்து ஞாபகபடுத்திய உடன் மானேஜரிடம் சொல்லிவிட்டு வங்கியை விட்டு புறப்பட்டேன்.பெருமாள்புரத்தில் இருக்கும் என் வீட்டிற்கு வந்து சேர மணி மூன்று ஆகிவிட்டது.

"ரெண்டு மணிக்கு வர ஆளா நீங்க! நான் ரெடியா இருக்கிறேன்."


"அஞ்சே நிமிஷத்தில் கிளம்பிடலாம்." முகத்தை மட்டும் அலம்பி சற்று பவுடர் பூசிக்கொண்டு உடனே கிளம்பினோம்.புது பேரூந்து நிலையத்தில் இருந்து 3.40 க்கு கிளம்பும் பஸ்சில் இடம் கிடைத்தது.

"நாலே முக்கால்,அஞ்சு மணி ஆகிவிடும்,நாம் அங்கு போய் சேர"


"செய்துங்கநல்லூர்,ஆழ்வார்திருநகர்,திருச்செந்தூர் மட்டும் ஏறுங்க.வேறு எங்கும் நிக்காது.வேறு டிக்கட்டு ஏதும் இருந்தால் தயவு செய்து இறங்கிடுங்க"

"ஸ்ரீவைகுண்டம் நிக்காதா?"

"நிக்காது.அதானம்மா சொல்றேன்."


வேகமாக ஒரு பெண் கை குழந்தையுடன் பேரூந்தை விட்டு இறங்கினாள்.அவள் இறங்கும்போது ஒரு சந்நியாசி வந்து ஏறினார்.காவி உடை, முடி வளர்த்து முதுகு வரை விரித்து விட்டு, மேல் வயிறு வரை நீண்ட தாடியுடன்,தீட்சண்யமான கண்களுடன் இருந்தார்.

"எங்கே சாமி?"

"திருச்செந்தூர்"

"உட்காருங்க சாமி"


நாங்கள் இருந்த இருக்கைக்கு இரண்டு வரிசை முன்னால் உள்ள சீட்டில் அமர்ந்தார். ஏற்கனவே அங்கு இன்னும் இருவர் இருந்தனர். சற்று நகர்ந்து சாமியார் அமர இடம் கொடுத்தனர். பஸ் கிளம்பியதும் நல்ல காற்று வீச ஆரம்பித்தது. லேசாக கண் சொக்க ஆரம்பித்தது. தூங்க கூடாது என்று முடிவு செய்தேன். பொழுது போக பஸ்சில் இருந்தவர்களை எல்லாம் அப்படியே ஒரு பார்வை பார்த்தேன். சந்நியாசி இருந்த இருக்கை வந்த உடன் கண்கள் குத்திட்டு நின்றது. காரணம் சாமியார் தலையை லேசாக ஒருக்களித்து சாய்த்து,கைகளால் தலை முடியை கோதிவிட்டு,கழுத்தை வலது புறம் இருந்து இடது புறமாக சுழற்றினார். இது போன்று செய்பவர் யாரையோ எனக்கு தெரியுமே!யோசித்து பார்த்தேன்.புலப்படவேயில்லை.ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை சாமியார் இது போல செய்து கொண்டே இருந்தார். சந்தேகமே இல்லை .எனக்கு தெரிந்த யாரோ ஒரு நபர் இது போல செய்வார்.எவ்வளவவு யோசித்தும் யாரென்று நினைவுக்கு வரவில்லை.

"அந்த சாமியார் அநேகமாக எனக்கு தெரிந்த நபராக இருப்பார் என்று நினைக்கிறேன்." என் மனைவி என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள்.

"ஏன் அவரும் உங்களுடன் படித்தவரா?" கிண்டல் தொனிக்க கேட்டாள்.

"தெரியலை.இருக்கலாம்.அவர் முகத்தை நன்றாக பார்த்தால் தெரிந்துவிடும்."


எவ்வளவோ முயற்சித்தும் அவர் முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை.ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் கழுத்தை சுழற்றி கொண்டே இருந்தார்.அவரின் இந்த செய்கை என் ஆவலை மேலும் கூட்டியது.திருசெந்தூரில் இறங்கியதும் எப்படியாவது அவரின் முகத்தை உற்று பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தேன்.பஸ்சில் கந்த ஷஷ்டி கவசம் ஒலி பரப்பினார்கள். சாமியாரின் தலை ஆட்டல் பாடலுக்கு ஏற்ப தாளம் இடுவது போல இருந்தது எனக்குள் சிரிப்பை வரவழைத்தது.


5 மணியளவில் திருச்செந்தூர் வந்ததும் வேகமாக சென்று சாமியாரின் முகத்தை பார்த்து விடவேண்டும் என்று முயற்சித்தேன்.அதற்குள் அவர் இறங்கி வேகமாக நடக்க ஆரம்பித்து விட்டார். பார்க்க முடியவில்லை.வேகமாக நடந்து அவரை எட்டி பிடித்து பார்த்து விட வேண்டும் என்று பார்த்தால், என் மனைவியால் அந்த வேகத்தில் நடக்க முடியாது என்பதால் முயற்சியை கை விட்டேன்.

"அவர் யாராக  இருந்தால் நமக்கென்ன,நாம வந்த வேலையை முடித்து விட்டு சீக்கிரம் ஊர் போய் சேருகிற வழியை பார்போம்"


தரிசன டிக்கட்டு வாங்கி விட்டு, சட்டையை கழற்றி இடுப்பில் கட்டி கொண்டு வரிசையில் நிற்கும் பொழுது அதே சாமியார் இன்னொரு சாமியாருடன் வேகமாக எங்களை கடந்து போய் கொண்டிருந்தார்.நடந்து போகும் போதும் அதே போல கழுத்தை சுழற்றிய படியே நடந்தார். செந்தில் ஆண்டவனை தரிசித்து விட்டு, சிறிது நேரம் கடல் காற்றை வாங்கி ரசித்து விட்டு, நாழி கிணறு போகும் பாதைக்கு சற்று முன்பு இருக்கும் செருப்பு டோக்கன் கொடுக்கும் இடத்தில் நிற்கும் போது,மீண்டும் சாமியார் எங்களை தாண்டி சென்றார். இந்த முறை அவர் என்னை உற்று நோக்கினார். மிகவும் பரிச்சயமான் முகம் போல தோன்றியது. ஆனால் யாரென்று சட்டென்று கணிக்க முடியவில்லை.

கோவில் கடை வாசலில் ஏதோ வங்க வேண்டும் என்று என் மனைவி சென்ற சமயம் நான் சற்று தள்ளி ஒரு இடத்தில் அமர்ந்தேன்.தற்செயலாக திரும்பி பார்த்தால் சாமியார் சற்று தள்ளி கண் மூடி தியான நிலையில் அமர்ந்திருப்பதை பார்த்தேன்.கண் மூடியிருந்த அந்த நிலையிலும் அந்த மேனரிசத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார்.அப்படி அவர் தலை முடியை கோதும் போது நெற்றியில் வலது ஓரமாக ஒரு சிறு கோடு போல ஒரு தழும்பு தெரிந்தது.உடனே எனக்கு ஒரு பொறி தட்டியது.என்னுடன் படித்த களக்காடு சிவஞானம் போல உள்ளாரே இந்த சாமியார். ஆனால் சிவஞானத்திற்கு நெற்றி தழும்பு இன்னும் சற்று தடிப்பாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் தழும்பு இருக்கும் இடம் ஏறக்குறைய சரியாக தான் உள்ளது. முக்கியமாக சிவஞானம் கிட்டத்தட்ட இதே போல ஒரு மேனரிசம் செய்வான். ஆனால் சிவஞானத்தை என்னால் சாமியாராக எண்ணி பார்க்க முடியவில்லை. கல்லூரி நாட்களில் அவன் ஒரு ஜாலி பேர்வழி. அவனை சுற்றி எப்பொழுதும் ஒரு கூட்டம் இருக்கும்.அவன் சொல்லும் காதல் கதைகளை ரசிக்க நண்பர்கள் கூட்டம் எப்போதும் அவனை மொய்ப்பதுண்டு.அவன் செய்யாத அட்டூழியம் ஏதுமில்லை என்றே சொல்லலாம்.அவன் சொல்வதில் உண்மை எவ்வளவவு என்று அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்.ஒரு சமயம் அவன் செய்த குறும்புக்கு பரிசாக ஏதோ ஒரு கும்பல் கொடுத்த பரிசு தான் அந்த நெற்றி தழும்பு.சிவஞானத்தை சாமியாராக கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.இருந்தாலும் அவனுக்கும் சாமியாருக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை இருப்பதால் சாமியார் சிவஞானமாக கூட இருக்கலாம். இருந்தாலும் இந்த மாற்றம் அவனிடம் ஏற்பட என்ன நடந்திருக்கலாம்? இப்படியெல்லாம். நினைத்து கொண்டே நான் சாமியார் முன் சென்று நின்றேன். எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை. கண் விழித்து என்னை பார்த்தார்.என்ன வேண்டும் என்பது போல உற்று நோக்கினார்.அவருக்கு என்னை தெரியவில்லை.மீண்டும் புருவத்தை சுருக்கி என்னை பார்த்துவிட்டு கண்களாலயே என்ன வேண்டும் என்று கேட்டார்.

"சாமி நான் ஓன்று கேட்டால் தவறாக நினைக்க மாடீங்களே?" கேள் என்பது போல தலையை அசைத்தார்.

"பூர்வாசிரமத்தில் உங்கள் பெயர் சிவஞானமா?" என் கண்களை உற்று நோக்கினார்.என்வழுக்கை தலை என்னை அடையாளம் காட்டியிருக்க வாய்ப்பில்லை.

"ரிஷிமூலம் பார்க்காதே.நான் சிவானந்தா"

"Every saint has a past " என்று ஆங்கிலத்தில் வேறு சொன்னார்.

கிட்டத்தட்ட சிவஞானம் தான் சாமியார் என்று நான் நினைத்தாலும் சாமியார் பிடி குடுக்கமலயே தான் பேசினார். சாமியார் ஆங்கிலத்தில் பேசியதும்,சிவஞானம் ஆங்கில ட்யுஷன் படிக்க சென்ற கதை என் நினைவுக்கு வந்தது.அந்த ஆங்கில பேராசிரியர் பக்கத்து மாநிலத்துக்காரர். அவர் மனைவி மிகவும் அழகாக இருப்பார்.அதற்காகவே ஆங்கில ட்யுஷன் கற்க சென்றவன் தான் சிவஞானம்.ட்யுஷன் சென்று வந்த பின்பு அவன் கூறும் கதைகளை கேட்க ஒரு சிறு கூட்டம் அவன் பின்னால் செல்லும்.

மீண்டும் என்னை உற்று பார்த்துவிட்டு எனக்கு விபூதி அளித்து "திருச்சிற்றம்பலம்" என்றார்.எனக்கு விபூதி அளிப்பதை பார்த்து குடும்பத்துடன் சென்று கொண்டிருந்த ஒருவர் சாமியாரிடம் திருநீறு வாங்க கை நீட்டினார்.அவருக்கும் விபூதி அளித்தார்.

"சாமி எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி வாக்குவாதம் வந்துகொண்டே இருக்கிறது.மன அமைதியே இல்லை " என்று சொன்னார்.அப்படி அவர் சொன்ன உடன் அவர் மனைவியின் முகம் சுருங்கியது.அதை கேட்ட உடன் சாமியார் வாய் விட்டு பலமாக சிரித்தார்.

பின்பு அந்த நபரை பார்த்து சொன்னார்

"சீறும் வினையது பெண்ணுருவாகி திரண்டுருண்டு
கூறுமுலையு மிறைச்சியுமாகி கொடுமையினால்
மீறுமலமு முதிரமும் சாயும் பெருங்குழிவிட்டு
ஏறும் கரைகண்டலேன் இறைவா கச்சியேகம்பனே"

அவர் சொல்லி கொண்டிருக்கும் போதே என் மனைவி என்னை தேடி அங்கு வந்துவிட்டாள்.எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.பரவாயில்லை சிவஞானம் என்னவோ தத்துவமெல்லாம் சொல்லுகிறானே என்று நினைதேன்.

"இந்த சாமியார் எதற்கு அவரிடத்தில் பட்டினத்தார் பாடலை சொல்கிறார்?"

"அது பட்டினத்தார் பாடலா?"

" ஆமாம் .அவரது பாடல்கள் எல்லாம் பெண்களை குறை கூறுவது போல தான் இருக்கும்"


என் மனைவி தமிழ் முதுகலை பட்டதாரி. அவள் சொன்னால் சரியாக தானிருக்கும்.பெண்களால் ஏதோ நடந்து விரக்தி அடைந்து பட்டினத்தார் பாடலகள் பாடுகிறானோ? யாருக்கு தெரியும்! ஆனால் அப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

"நம்முடன் பஸ்சில் வந்தாரே அந்த சாமியார் என் வகுப்பு தோழன் சிவஞானம் போல தான் தெரிகிறான்" என் மனைவி என்னை ஒரு மாதிரி பார்த்தாள்.

"இனி உங்களுடன் படிக்காதவர் யாரென்று மட்டும் சொல்லுங்கள்"

Every saint has a past என்பதால் தான் பெரியவர்கள் 'நதிமூலம் ரிஷிமூலம்' பார்க்ககூடாது என்று சொல்லி இருக்கிறார்கள் போலிருக்கிறது.ஆனால் எனக்கு இன்னொரு விஷயமும் நன்றாக புரிந்தது. Every sinner has a future!.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக