காலை 11 மணி. வடக்கு வெளி வீதியில் இருசக்கிர வாகனத்தில் போய் கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் போன வாகனங்கள் வேகத்தை குறைத்து சிக்னலில் நிற்க நானும் வேகத்தை குறைத்து மெதுவாக நிறுத்தினேன். "மதுரைக்கு போகாதடி" பாடல் அருகில் இருந்த காரில் இருந்து ஒலித்தது. பக்கத்து மாநிலத்தில் இருந்து வந்திருந்த கார் அது. "மதுரைக்கு போகாதே" பாடிக்கொண்டே மதுரைக்கு வருவார்கள் போலிருக்கிறது.சிக்னல் விழவும் அப்படியே இடது புறம் திரும்பி மேல மாசி வீதி நோக்கி பயணித்தேன்.மேல மாசி வடக்கு மாசி சந்திப்பில் நேரு ஆலால விநாயகருக்கு அப்படியே வண்டி ஒட்டிகொண்டே ஒரு கும்பிடு போட்டேன். நேருவுக்கும் இந்த கோவிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டு மாசி வீதி சேரும் சந்திப்பில், இந்த சாலயோர விநாயகர் கோவில் அருகில் மேடை போட்டு அரசியல் கூட்டங்கள் நடக்கும்.முன்பு எப்போதோ ஒரு முறை நேரு இங்கு ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார். அவ்வளவு தான் விஷயம். விநாயகருக்கு பெயர் வந்துவிட்டது. அது தான் மதுரை. மேல மாசி வீதியில் சற்று தொலைவில் சிறு கூட்டம் சாலையை மறித்து நிற்பது தெரிந்தது. கூச்சலும் குழப்பமும் தெரிந்தது.முன்னேற முடியாமல் நானும் அங்கு நிறுத்தினேன்.
"படு பாவி இப்படி மோசம் பண்ணிட்டானே, 50,000 ரூபாய் போச்சே"
"அம்மா சும்மா இரு,சத்தம் போடாதே,எல்லோரும் உன்னை கவனிக்கிறாங்க"
"உனக்கென்ன,கஷ்டப்பட்டு சம்பாதிச்சது,இப்படியா போகணும்"
சிறிது தள்ளி இன்னொருவர் எங்கோ வெறித்து பார்த்து கொண்டிருந்தார்.
" நீ இப்படி அப்சட் ஆகாதடா,பார், எத்தனை பேர் பாதிக்கபட்டிருக்காங்க"
"ஏதாவது நடவடிக்கை எடுப்பார்கள்.பணம் கிடைத்துவிடும்"
"கஷ்டப்பட்டு உழைத்த பணம் அப்படி எல்லாம் வீண் போகாது"
"அவன் மட்டும் என் கையில் கிடைச்சா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது"
"கிழிச்ச! இப்ப ஆவேசப்பட்டு என்ன செய்ய? விசாரிச்சிருக்கணும்"
"எல்லாம் கோட்டை விட்டாச்சு"
"எதிர் பார்க்கவேயில்லை.நம்புகிற மாதிரியே பேசி கழுத்தை அறுத்திட்டான் "
"போலீசிடம் புகார் கொடுக்கலாமா?"
"அவங்க வேற உயிரை எடுப்பாங்க"
"எப்படியும் கொடுத்து தானே ஆகணும்"
மூடப்பட்டிருந்த ஒரு கட்டிடத்தின் முன்பு கூடியிருந்த மக்களின் ஆவேசம் தான் இது.அந்த கட்டிடத்தில் "டிஜி மாஸ்டர்" "க்ளோப் ஆதரைஸடு ட்ரைனிங் சென்டெர்" ஆங்கில பெயர் பலகை இருந்தது.கட்டிடத்தின் மேல் வீட்டிலுள்ளவர்கள் மேலிருந்து வேடிக்கை வேறு பார்த்து கொண்டிருந்தார்கள்.க்ளோப் என்பது உலக அளவில் பெயர் போன கிராபிக்சு மற்றும் அனிமேஷன் மென்பொருள் வெள்யிட்டுள்ள நிறுவனம் என்பது எனக்கு தெரியும்.உபயம் கணினி துறையில் வேலை பார்க்கும் என் மகன்.ஒரு பன்னாட்டு நிறுவனம் இப்படி கூட செய்யுமா? கலி காலம்.எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
" பெரிய நிறுவனத்தின் அங்கீரிக்கப்பட்ட பயிற்சி மையம். வேலைக்கு உத்திரவாதம் கூட கொடுத்தார்கள்.சென்னை,பெங்களூரு,புனே,மும்பை போன்ற பெரிய நகரங்களில் வேலை கிடைக்கும்.குறைந்த பட்சம் 15 இல் இருந்து 20 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். கட்டணம் 50,000 ரூபாய் ஒரே தவணையில் கட்டவேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள்.நம்பி மோசம் போனோம்".
"ஒரே ஒரு வாரம் தான் ஆகியிருக்கும் சார்.வாரத்தில் மூன்று நாள் தான் பயிற்சி .ஒரு நாளைக்கு 2 மணி நேரம் தான் வகுப்பு.ஒரு பேட்சுக்கு 20 மாணவர்கள் தான்.காலை 8 முதல் இரவு 8 வரை 6 பேட்சுகள்.இது போல மொத்தம் 12 பேட்சுகள்.ஒரு நபரிடம் 50,000 ரூபாய் வீதம் 120 பேரிடம் வசூலித்து விட்டான் சார்.நாலு நாளைக்கு முன்ன நெட்வொர்க்கு,கம்ப்யூட்டர் எல்லாம் வைரசு அட்டாக் ஆகி சிஸ்டம் கிராஷ் ஆகிவிட்டது. மீண்டும் எல்லா சிஸ்டத்திலும் ஆபரேடிங் சிஸ்டம்,சாப்ட்வேர் எல்லாம் ரீ இன்ஸ்டால் செய்யனும்.அதனால் சென்டருக்கு மூன்று நாள் விடுமுறை என்று சொன்னான் சார்.நம்பினோம்.இப்ப ஊரை விட்டே ஓடிவிட்டான் என்று சொல்கிறார்கள்.கொல்லணும் சார் அவனை"
" நான் க்ளோப் பெங்களூரு ஆபிசுக்கு போன் செய்து கேட்டேன்.எங்களுக்கு அந்த மாதிரி பயிற்சி மையம் எதுவும் மதுரையில் இல்லைன்னு சொன்னார்கள்"
"அதான பார்த்தேன்.பெரிய நிறுவனம் இந்த மாதிரி 420 வேலை எல்லாம் செய்யாது."
ஆவேசத்தின் உச்சியில் இருந்த ஒருவர் ஒரு பெரிய கல்லை எடுத்து கட்டிடத்தை நோக்கி வீசினார்.அவ்வளவு தான் சரமாரியாக கற்கள் பொழிய ஆரம்பித்தது.மேல் வீட்டிலிருந்த பெரியவர் ஒருவர் அங்கிருந்தே உரக்க கத்தினர்
"அவனுக்கும் சேர்த்து எறிடா கல்லை" கீழே இறங்கி வந்து விடுகிறார் பெரியவர்.
"தம்பி உங்களுக்கு நான் என்ன கெடுதல் செய்தேன்? கட்டிடத்துக்கு சேதம்
ஏற்படுத்தாதீங்க.நானும் உங்களை போல பாதிக்கப்பட்டவன் தான்.நானும் ஏமாந்து தான் நிற்கிறேன்."
"சும்மா கதை விடாத.சுளையா அட்வான்சு வாங்கியிருப்ப இல்ல?""60,000 தான் வாங்கினேன்"
"அப்புறம் என்ன? ஒரு வாரதிற்க்கே அறுபதினாயிரமா?"
"அந்த பணத்தை எங்களுக்கு பிரித்து கொடு" பெரியவரின் சட்டையை பிடித்து எகிறினான் ஒருவன்.மேலிருந்து "அவரை ஒன்றும் செய்யாதீங்க! மேலுக்கு முடியாதவர் "
"நிலைமை மோசமாகிறது.போலீசுக்கு போன் போடு"
"உள்ளாற இருக்கிற கம்ப்யூட்டர் எல்லாம் வித்து உங்களக்கு சேர வேண்டியதை எடுத்துங்கங்க" இது பெரியவர்.
"அங்க ஒன்னும் இருக்காதுன்னு நினைக்கிறேன்"
"ஏன்?"
"இரண்டு நாளைக்கு முன் நான் இந்த பக்கம் போனேன்.அப்போது சென்டரில் இருந்து கம்ப்யுடர்களை ஆட்டோவில் ஏற்றி கொண்டிருந்தான்.சீக்கிரம் வேலை முடிப்பதற்காக இரண்டு இடத்தில் வைத்து ரீ இன்ஸ்டால் செய்வதாக சொன்னான்.ஹார்டுவேர் இன்ஜினீயர் இடத்துக்கு போவதாக சொன்னான்.நாளை மறுநாள் மறக்காமல் வகுப்புக்கு வர வேறு சொன்னான்"
என்னை போலவே ஆர்வத்துடன் இதையெல்லாம் கேட்டுகொண்டிருந்தவர் "எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க! என்னா டெக்னிக்கு! உக்காந்து யோசிப்பாங்களோ?".
வேறு ஒண்ணுமில்லை.வடிவேலுவின் பாதிப்பு தான்.
போலீசு வேன் சீறி கொண்டு வருகிறது. இன்ஸ்பெக்டரும் போலீசாரும் வேகமாக இறங்குகிறார்கள்."என்ன கலாட்டா இங்க?"
ஒருத்தர் அனைவரின் சார்பில் விளக்கம் அளிக்க "பி 4 வந்து புகார் கொடுங்க"
"இப்ப எல்லோரும் கலைந்து போங்க.அவனை பத்தி எல்லா விவரமும் தெரிந்த ஒருத்தர் ஸ்டேஷன் வந்து புகார் கொடுங்க.பாதிக்கப்பட்ட எல்லோரும் தனி தனியாக புகார் கொடுக்க வேண்டும்.அப்ப தான் எப்.ஐ.ஆர் போட முடியும்.பெரியவரே நீங்களும் வரணும்.வாடகைக்கு விட முன் விசாரிக்கிறது கிடையாதா?"
புலம்பி கொண்டே கூட்டம் கலைய, நானும் வண்டியை கிளப்பினேன்.டவுன் ஹால் ரோடு சந்திப்பு வந்ததும் மீனாக்ஷி அம்மன் கோவில் மேல கோபுரம் தெரிந்தது. வழக்கம் போல வண்டி ஒட்டிகொண்டே அந்த திசை நோக்கி ஒரு கும்பிடு போட்டேன்.வாரியார் சுவாமிகளின் மீனாக்ஷி அந்தாதி வரிகள் தான் என் நினைவுக்கு வந்தது.
" இளம் புதல்வர்கள் துன்பம் களைந்தருள்வாய் மீனாக்ஷயுமயே!
பொய் புல்லர்கள் செய்யும் இடர் களைவாய் மீனாக்ஷயுமயே"
அவர்களுக்காக நம்மால் முடிந்தது இது மட்டுமே.
Hey Kalyana Sundarare!!!
பதிலளிநீக்குUnga sirukadhai romba nalla irundhadhu.
Narration was very interesting.
You just broughtout beautifully the feel of such people and frankly the story doesnot look like a story at all!!!
Nijathai nijama solli,adhu nijamillai kadhai_nu kadhaikkaringala???
Very nice.
Regards,
Priya.
மிக்க நன்றி ப்ரியா அவர்களே. எனது முதல் சிறுகதைக்கு வந்த முதல் பாராட்டு.இது போன்ற சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நடக்கிறது.அனால் இது நிஜமல்ல கற்பனையே.
பதிலளிநீக்கு